Thursday, October 30, 2025

மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்பிதழ்!


நாயகத் துதிபாடல் தான் தமிழ் சமூகத்தை தொடர்ந்து சீரழித்து வருகிறது. " ஊருக்கு ஒரு லீடர் , ஆளுக்கொரு கொள்கை , அவனவனுக்கு ஒரு டசன் பட்டினி பட்டாளம் " என்ற 'இரத்தக்கண்ணீர் ' -ல் இடம்பெற்ற எம்.ஆர்.ராதாவின் வசனம் இன்றும் பொருந்துகிறது. சினிமா மட்டுமல்ல அரசியல், ஆன்மீகத்திலும் இதே நிலை தான். ஒரு குறிப்பிட்ட மனிதரை தலைவராக ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்காக அந்தத் தலைவர் எது சொன்னாலும் சரி என்று முட்டுக் கொடுப்பது தான் ஆபத்தானது. மனிதர்கள் தங்களின் செயல்கள் மூலமே அடையாளம் காணப்பட வேண்டும். படைப்புகளின் மூலமே படைப்பாளியை கண்டடைய வேண்டும். இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது செயல்களையும் , படைப்புகளையும் தானே ஒழிய மனிதர்களையும், படைப்பாளிகளையும் அல்ல. ஒரு நல்ல செயலை செய்ததற்காக அந்த மனிதர் செய்யும் எல்லா செயல்களையும் ஏற்றுக்கொள்வதும் , ஒரு நல்ல படைப்பைக் கொடுத்ததற்காக அந்த படைப்பாளியின் அனைத்து படைப்புகளையும் கொண்டாடுவதும் முட்டாள்தனம். 


'பாலிடிக்ஷ் தெரியாத பயலுகளெல்லாம் பாலிடிக்ஷ் பத்தி பேசறானுக ' என்ற எம்.ஆர்.ராதா தான் மீண்டும் நினைவிற்கு வருகிறார். வாரத்திற்கு ஒரு அரசியல் தலைவர் தமிழகத்தில் உதயமாகிறார். அதிலும் இந்த ரஜினி , கமல் பேசுவதெல்லாம் மகா மட்டமாக இருக்கிறது. பெரியாரின் கொள்கைகளை கடைப்பிடிப்பதாக சொல்லும் திமுக , திக வையும் விமர்சிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அங்கேயும் நாயகத் துதிபாடல் தான் இருக்கிறது. அரசியல் மக்களுக்கானது. மக்களுக்கான அரசியல் மாநிலத்திலும் இல்லை , மத்தியிலும் இல்லை. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் மக்களுக்கான அரசியலை தொடர்ந்து பேசி வருவது இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே. தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமானதற்கு எம்.ஜி.ஆர். தான் காரணம் என்கிறார்கள். எந்த வகையில் பாதிப்பை உருவாக்கினார் என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆரின் அதிமுக-வோடு கூட்டணி அமைத்தது தான் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமானதற்கு காரணமாக இருக்கலாம். தற்போதும் தமிழகத்தில் மக்களின் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் இயக்கங்களாக இடதுசாரி இயக்கங்கள் தான் உள்ளன. மக்களோடு மக்களாகத் தான் இருக்கிறார்கள் , மக்களுக்காகத்தான் இயக்கங்கள் நடத்துகிறார்கள், மக்களுக்காகத்தான் போராடுகிறார்கள் , ஆனால் அரசியல் நிலைப்பாடு என்ற ஒன்றை எடுக்கும்போது மட்டும் மக்களின் மனநிலைக்கு எதிராக எடுக்கிறார்கள். அது தான் மக்களை ஒட்டவிடாமல் செய்கிறது. 


காலத்துக்கேற்ற மாற்றங்கள் இடதுசாரி இயக்கங்களில் நிகழ வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவின் இடதுசாரி இயக்கங்கள் தங்களின் வேற்றுமைகளை களைந்து ஒன்றிணைய முன் வர வேண்டும். உலகமயமாக்கலும் , வலதுசாரி இயக்கங்களும் வலுவடைந்து வரும் சூழலில் இடதுசாரி இயக்கங்களும் தங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தமிழகத்தில் ஒரு இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் இருப்பது இடதுசாரி கொள்கைகளை ஆதரிக்கும் மக்களுக்கு அவமானமாக இருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான தற்கால உதாரணம் , கேரளம். அவ்வளவு ஏன் தமிழகத்தில் கடந்த முறை இடதுசாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து தற்போது வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பிர்களாக இருக்கும் தொகுதி மக்களைக் கேட்டாலே வித்தியாசம் தெரிந்துவிடும். 


இந்த சூழலில் இருந்து தான் வெளிவந்திருக்கும் 'மேற்குத் தொடர்ச்சி மலை' திரைப்படத்தின் முக்கியத்துவத்தை பேச வேண்டியிருக்கிறது. முதலில் இத்திரைப்படத்திற்கு சிறப்பிதழ் கொண்டு வந்த படச்சுருளுக்கு நன்றி. இத்திரைப்படத்தை பார்த்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் சலனம் உருவாகியிருக்கும். எளிய மக்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பு மாறாமல் பதிவு செய்வது அவ்வளவு எளிதானதல்ல. தனது திட்டமிடப்பட்ட உழைப்பால் இதை சாத்தியமாக்கி இருக்கிறார் , லெனின் பாரதி. இந்த இதழில் இடம்பெற்ற அனைத்து கட்டுரைகளும் இந்தத் திரைப்படம் அவர்களுக்கு உருவாக்கிய மனப்பதிவுகளாக அமைந்திருந்தன. இந்த இதழில் இடம்பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தில் நேரடியாக பங்குபெற்ற ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் நேர்காணலும் , இயக்குனர் லெனின் பாரதியின் விரிவான நேர்காணலும் முக்கியமானதாகிறது.


வசனம் எழுதிய ராசி தங்கதுரை மற்றும் படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் அவர்களின் மனநிலையையும் பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் இத்திரைப்படத்தின் வசனம் மிகவும் முக்கியமான ஒன்று. படத்தொகுப்பு எனும் போது லெனின் பாரதி சொன்னது போல 99 நிமிடங்கள், இரண்டு மணி நேரம் மற்றும் 3 மணி 20 நிமிடங்கள் என மூன்று அளவுகளில் படத்தின் தன்மை மாறாமல் சுருக்க வேண்டிய சவால்கள் குறித்தும் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். எந்த இதழும் அதற்கான பக்கங்களை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இதை குறையாகவும் பார்க்க வேண்டியதில்லை. 


லெனின் பாரதி இத்திரைப்படத்தை உருவாக்கிய விதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இங்கே நிறைய கதைகள் அறைக்குள்ளேயே எழுதப்பட்டு , அரங்குகளிலேயே தான் படமாக்கப்படுகின்றன. அப்படியே கதைக்களத்தில் எடுத்தாலும் அம்மக்களின் உணர்வுகள் பிரதிபலிக்கப்படுவதில்லை. இதற்கு முன்பும், சமீப காலங்களில் கூட மலையையும் , மலையை ஒட்டிய நிலப்பரப்பையும் கதைக்களமாக வைத்து பல படங்கள் வெளிவந்திருந்தாலும் அவை இயல்பாகவும் இல்லை, அம்மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் இல்லை. 


லெனின் பாரதி , இத்திரைப்பட உருவாக்கத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொன்றையும் திட்டமிட்டே செயல்பட்டதால் அவருக்கு இது சாத்தியமாகியுள்ளது. இத்திரைப்படத்தின் வசனங்களே இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றாலும் இந்த திரைப்படத்தின் பல சொல்லாடல்கள் எங்கள் பகுதியிலும் உண்டு. ஒளிப்பதிவு நமது கவனத்தை மாற்றாமல் பார்த்து கொள்கிறது. மற்ற படங்களில் பின்னணி இசை மட்டுமே செய்யும் வேலையை இப்படத்தில் ஒளிப்பதிவும் இசையுடன் சேர்ந்து செய்திருக்கிறது.இதுவரை பார்த்த தமிழ் திரைப்படங்களில் 'சிவப்பு மல்லி' திரைப்படத்திற்குப் பிறகு கம்யூனிச கொடிகளை திரையில் பார்த்த திரைப்படமாக இதுவே இருக்கிறது. இடதுசாரி சிந்தனையுடன் படமெடுக்கவே இங்கே ஆட்கள் குறைவு. தங்கள் நிலப்பரப்பை தாண்டி வாழ்பவர்களின் நிலையை இன்னமும் தமிழ் சினிமா வெளிப்படுத்தவில்லை. விவசாயிகளின் வாழ்க்கையையும் , மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் அவர்களின் நிலையிலிருந்து அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இன்னமும் திரைப்படங்கள் வெளிவரவில்லை. ஆனால் தமிழக மக்கட்தொகையில் விவசாயிகளும் , மீனவர்களுமே அதிகம். இப்படி ' மேற்குத் தொடர்ச்சி மலை ' திரைப்படத்தை அது முன் வைக்கும் அரசியலைத் தாண்டி பேசுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. 


'மேற்குத் தொடர்ச்சி மலை ' திரைப்படம் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. படத்தின் பின் பகுதியில் ஏன் கழிவிறக்கத்தை உருவாக்க வேண்டும். ஈரானிய திரைப்படங்கள் எளிய மக்களின் வாழ்க்கையைத் தான் அதிகமும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் அங்கே எளிய மனிதர்களுக்கே உரித்தான பாசாங்கற்ற அன்பு தான் முன்னிலைப்படுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அன்பிற்கு குறைவில்லை தான். ஆனால் கழிவிறக்க மனநிலை உருவாகாமல் தடுத்திருந்திருக்கலாம். இந்த வாழ்வு தரும் எவ்வளவு பெரிய இழப்புகளையும் அநாயசமாக கடந்து செல்வதுடன் , அந்த வாழ்க்கையை கொண்டாடுபவர்கள் தான் எளிய மனிதர்கள். அப்படியான மனநிலை தான் அவர்களின் நீடித்த மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. அந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் உலகமயமாக்கல் பாதிக்கவே செய்திருக்கிறது ,அதை மறுப்பதற்கில்லை. நிலத்தை அடைவதை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்று காண்பித்து இருக்கலாம். 


இந்த பூமியின் ஒவ்வொரு நிமிடமும் உழைக்கும் மக்களின் உழைப்பால் தான் நகருகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் உழைக்கும் மக்களின் நிலை இன்னமும் மேம்படவில்லை. தொழிற்சங்கங்கள் வலுவிழந்தது தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அரசு வேலை செய்பவர்களுக்கு இருப்பது போன்ற வலிமையான தொழிற்சங்கங்கள் மற்ற உழைக்கும் மக்களுக்கு இல்லை. அமைப்பு சார்ந்த தொழிற்சங்களாலேயே இன்றைய முதலாளிகளையும் , அரசையும் எதிர்கொள்ள முடியவில்லை. சமீபத்திய யமாகா போராட்டம் ஒரு உதாரணம். தங்களின் உழைப்பை கூலியாக பெறும் ஒவ்வொருவரையும் அமைப்பிற்குள் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. அவர்களின் பணி பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். தற்போது அரசு வேலையில் மட்டுமே பணிப்பாதுகாப்பு இருக்கிறது.அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் ஏறக்குறைய 20,000 என இருக்கிறது. மற்றவர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியமாக 10,000 என்ற அளவிற்கு கூட இன்னமும் உயரவில்லை. சம வேலைக்கு சம ஊதியம் என்பது இன்னமும் சாத்தியமாகவில்லை. விலைவாசி என்பது எல்லோருக்கும் ஒன்று தானே. உழைக்கும் மக்கள் விசயத்தில் கேரளமே முன்னோடி மாநிலமாக இருக்கிறது. 


வணிக நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் இன்னும் பல இடங்களில் பணியாற்றுபவர்கள் வேலை இல்லாத போதும் கூட உட்கார்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. திரைப்படங்களும் , சின்னத்திரையில் ஒளிபரப்படும் தொடர்களிலும் ஆண்டான் அடிமை மனநிலையையே பிரதிபலிக்கிறார்கள். வர்க்க பேதங்களை கேள்வி கேட்பதற்கு பதலாக அவை இயல்பானதாக சித்தரிக்கப்படுகின்றன. சாலையில் செல்லும் போது, சரக்கு வாகனங்களில், ஏற்றப்பட்ட சரக்குகளின் மீதமர்ந்து பயணிப்பவர்களையும், கூலி வேலைக்காக சேர் ஆட்டோவிலோ, சரக்கு வாகனத்திலோ நெருக்கிப்பிடித்து செல்லும் உழைக்கும் மக்களையும் காணும் போது மனம் குற்றவுணர்வடைகிறது. இப்படி இந்த திரைப்படம் உருவாக்கிய சலனங்கள் அதிகம். லெனின் பாரதி , இத்திரைப்படத்தை திரையரங்கோடு விட்டுவிடாமல் வேறு தளங்களுக்கும், பள்ளி , கல்லூரிகளுக்கும் கொண்டு செல்ல இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அடுத்து வெளிவர இருக்கும் 3மணி 20 நிமிடங்கள் வடிவத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். 


மேற்குத் தொடர்ச்சி மலை படக்குழுவிற்கு வாழ்த்துகள் !

30-10-2018 

மேலும் படிக்க :

ஜமா - கலையின் கலை ! 

அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !

 


Friday, October 3, 2025

சலில் சௌதுரி 100 - மதுரை !

 


27-09-2025 அன்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஓவியர் ரவி பேலட் மற்றும் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகர் அவர்களின் ஒருங்கிணைப்பில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சூழலில் சலில் சௌதுரி என்ற பெயருடன் எப்போதும் நமக்கு நினைவிற்கு வருபவர் இசை விமர்சகர், ஷாஜி . ஷாஜிக்கு சலில் சௌதுரி போல நாம் எல்லோருமே ஏதோ ஒரு இசைக்கலைஞரை மற்ற கலைஞர்களை விட தீவிரமாக கொண்டாடுபவர்களாகவே இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் பிடித்தமானவராக இருப்பார். அந்த வகையில் நான் தீவிரமாக கொண்டாடும் இசைக்கலைஞர், மலேசியா வாசுதேவன் ❤️.


ஷாஜி அவர்களுடனான நட்பின் தொடக்கமே மலேசியா வாசுதேவன் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக சென்னையில் நடைபெற்ற அவரது இரண்டாவது நூலான ' இசையின் தனிமை ' நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வுதான் ( 18-09-2010). அப்போதிருந்து இந்த நட்பு தொடர்கிறது. இதற்கும் மலேசியா வாசுதேவன் நிகழ்விற்கு பிறகு சலில் சௌதுரி நிகழ்வில் தான் நேரில் சந்தித்துக் கொள்கிறோம். 15 ஆண்டுகள் இடைவெளி. நிகழ்விற்கு வந்திருப்பதை தெரிவிக்காமல் அரங்கத்தின் நடுவில் அமர்ந்திருந்தாலும் அடையாளம் கண்டுகொண்டு மேடையிலேயே நினைவுகூர்ந்தார்.


நண்பர் புஹாரி ராஜா அவர்களையும் முதன் முதலாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. யாரும் அடையாளப்படுத்தாத, யாரும் கண்டுகொள்ள விரும்பாத விளிம்பு நிலை மனிதர்களை தொடர்ந்து தனது ' Buhari Junction YouTube channel ' மூலமாக பதிவு செய்து வருகிறார். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நாமெல்லாம் நினைக்க மட்டுமே செய்கிறோம். புஹாரி ராஜா போன்றவர்கள் தான் அதை செயல்படுத்துகின்றனர். முன்பே அறிமுகமில்லாத நபராக இருந்தாலும் நான் பேசுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். பேச்சின் இடையில் " நீங்க மளிகை கடையில் உட்கார்ந்து இருக்கீங்க, நான் கறிக் கடையில் உட்கார்ந்து இருக்கேன் அவ்வளவு தான் வித்தியாசம்" என்று கூறியது அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தியது. மளிகைக் கடையில் இருந்தாலும் தனிப்பட்ட எழுத்து, வாசிப்பு, இசை, சினிமாவுடன் முடிந்துவிடுகிறது. உங்களைப் போல சமூகத்துடன் நேரடி தொடர்பில் இல்லை தோழர். உங்களது பணி மிகப்பெரியது. நீங்கள் நினைத்தபடி எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் புஹாரி ராஜா அவர்களே ❤️


பிராபாகர் ஐயா அவர்களின் கலகலப்பான அறிமுக உரையுடன் விழா தொடங்கியது. ஐயா குறிப்பிட்டது போல 'இசை விமர்சகர் ஷாஜி ' என்ற அவதாரத்தை நாங்கள் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். " உங்களுக்காக என்ன வேணா செய்யுங்க எல்லாவற்றையும் ஆதரிக்கிறோம். ஆனால் அப்பப்போ எங்களுக்காக இசை குறித்தும் ஏதாவது எழுதுங்க" என்று ஷாஜி அவர்களை அவரின் இசை எழுத்தின் ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.


உண்மையிலேயே எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் கலந்து கொண்ட நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது. ஷாஜி அவர்களை தூக்கத்தில் எழுப்பி சலில் சௌதுரி குறித்து பேச சொன்னால் கூட மட மடவென பேச ஆரம்பித்து விடுவார் என நினைக்கிறேன். ஷாஜி பேசிய ஒவ்வொரு முறையும் உற்சாக மிகுதியிலேயே பேசினார். சலில் சௌதுரியின் இசை நுணுக்கங்கள் குறித்தும் அவரது வாழ்வு குறித்தும் இன்னும் நெருக்கமாக ஷாஜியின் பேச்சின் ஊடாக தெரிந்து கொள்ள முடிந்தது. 


சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற உஷா ராஜ் அவர்களும் மற்றும் சனில் ஜோசப் அவர்களும் சிறப்பாக பாடி சலில் சௌதுரியின் இசைக்கு பெருமை சேர்த்தனர். விழாக் குழுவில் இருந்த ரவி பேலட் அண்ணன், ஷாஜியின் நெருங்கிய நண்பராக இருந்தும் ஒன்றை மறந்து விட்டார். நிகழ்விற்கான அழைப்பிதழில் இசை விமர்சகர், எழுத்தாளர் & நடிகர் என்று மட்டும் போட்டுவிட்டு, ஷாஜி அவர்கள் பாடுவது போன்ற ஒரு ஒளிப்படத்தையும் போட்டுவிட்டு அவரின் புதிய அவதாரமான பாடகர் என்பதை சேர்க்க மறந்துவிட்டார். ஆம் இசை விமர்சகர் ஷாஜி அவர்களுக்கு பாடவும் தெரியும். சலில் சௌதுரிக்காக எந்த அவதாரத்தையும் எடுக்க ஷாஜி தயாராகவே இருக்கிறார். சலில் சௌதுரி குறித்தான அவரது ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும். 


கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கமும் சிறப்பாக இருந்தது. நல்ல ஒலித்தரத்தில் நல்ல இசையைக் கேட்க முடிந்தது. உஷா ராஜ் அவர்கள், இசை மீது தீரா ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். தான் பாடவில்லை என்றாலும் மற்றவர்கள் பாடும் பாடலையும் கூடவே சேர்ந்து வாயசைத்துக் கொண்டிருந்தார். சனில் ஜோசப் அவர்களின் குரலும் கேட்பதற்கு நன்றாக இருந்தது. தங்களது பணிகளுக்கு இடையிலும் ஷாஜிக்காகவும், சலில் சௌதுரிக்காகவும் மதுரை நிகழ்வில் கலந்து கொண்ட இந்த இருவருக்கும் பார்வையாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


இசைக்கு எல்லைகள் கிடையாது என்பது இந்த AI காலத்திலும் தொடர்ந்து நிரூபனமாகி வருகிறது. இந்த நிகழ்வில் இதுவரை கேட்காத நிறைய சலில் சௌதுரி அவர்களின் பாடல்களைக் கேட்க முடிந்தது. ' ஓணப் பூவே.. பூவே.. ' என்ற மலையாள பாடல் பாடி முடிக்கப்பட்ட பிறகு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் மீண்டும் அந்தப் பாடலை ' ஒணப் பூவே .. பூவே.. ' என பாடிக் கொண்டிருந்தான். அதைக் கேட்க மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கால குழந்தைகள் காதை ஒரு 'வலி' பண்ணும் அனிருத் பாடல்கள் மட்டுமே கேட்பார்கள் என்ற பிம்பம் உடைந்தது. தவறு நம்மிடமும் இருப்பது போலவே தோன்றுகிறது. நமக்கு பிடித்த இசையை நாம் தொடர்ந்து கேட்கும் போது ஏதோ ஒரு தருணத்தில் அந்த இசையை குழந்தைகளும் கேட்க ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்.  


ஷாஜி அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னது போல சலில் சௌதுரியின் ஒரே டியூனாக இருந்தாலும், வெவ்வேறு இடங்களில் மீண்டும் பயன்படுத்தினாலும் அந்த பாடலும் வெற்றிப் பாடலாக அமைவது தான் சலில்தாவின் திறமைக்கு எடுத்துக்காட்டு. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருமே சலில் சௌதுரி குறித்து கூடுதலாக எதையாவது தெரிந்து கொண்டுதான் அரங்கத்தை விட்டு வெளியேறி இருப்பார்கள். குறைந்தபட்சம் இப்படி ஒரு இசையமைப்பாளர் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார் என்றாவது அறிந்திருப்பார்கள். 


நிகழ்வு முடிந்த பிறகு தீவிரமான அரசியல் பேசும் ஓவியங்களை தொடர்ந்து வரையும் ரவி பேலட் அண்ணன் அவர்களையும் முதன் முதலாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. எங்களுக்காக அவர் ஓவியங்கள் வரைந்திருந்தாலும் நேரில் சந்தித்ததில்லை. மிகவும் அக்கறையுடன் விசாரித்தார். அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பே நிறைந்திருந்தது. மகிழ்வான தருணம். 


ஷாஜி அவர்களை இவ்வளவு உற்சாக மிகுதியில் இதற்கு முன்பு பார்த்ததில்லை. " தம்பி, நீயே இப்ப தான் இரண்டாவது தடவை நேரில் பார்க்கிறதா சொன்ன. இதுல பல தடவ நேரில் பார்த்த மாதிரி பேசுற" என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. அவரிடம் பல முறை பேசியதிலிருந்து குறிப்பிடுகிறேன். நமது மனதிற்கு பிடித்தமானவர்களைப் பற்றி பேசும் போது தான் நம்மால் சலிப்பே இல்லாமல் மணிக்கணக்காக பேச முடியும். அப்படித்தான் சலில்தா பற்றி ஷாஜி பேசுகிறார் என நினைக்கிறேன். 


சலில் சௌதுரியின் இசையைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ' சொல்லில் அடங்காத இசை' என்ற ஷாஜி அவர்களின் முதல் புத்தகத் தலைப்பைத் தான் குறிப்பிட வேண்டியிருக்கும். அதனால் தான் சலில்தாவால் மொழிகள் கடந்தும் வெற்றிப்பாடல்களை கொடுக்க முடிந்திருக்கிறது.


" இன்னிசை மட்டும் இல்லையென்றால்... " நம் வாழ்வு இன்னும் சிக்கலாகவே இருக்கும். இசையுடன், கலையுடன் கூடவே இயற்கையுடன் இந்த வாழ்வை வாழ்ந்து முடிப்போமாக ! 


அந்த சனிக்கிழமை மாலையை சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் நன்றி 🙏 


#SalilChowdhury 

#salilchowdhury100


மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

CHAT WITH CHEN - அலெக்ஸ் - நேர்காணல் ❤️



Wednesday, September 24, 2025

Stress Buster - மன அழுத்தத்திலிருந்து விடுபட !


நவீன வாழ்வு நாள்தோறும் நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது. நாம் சந்திக்க நேரும் நெருக்கடிகளை தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து விரைவாக வெளியேறலாம். எந்த நெருக்கடிக்கான தீர்வும் அந்த நெருக்கடிக்குள் இருப்பதில்லை. அந்த நெருக்கடிக்கு வெளியிலிருந்து அணுகுவதன் மூலமே அந்த நெருக்கடியைக் கடக்க முடியும். எந்த ஒன்று நெருக்கடியிலிருந்து நம்மை வெளியே கொண்டு வந்து அந்த நெருக்கடியை கடக்க உதவுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


எல்லாவித நெருக்கடிகளையும் ஒரே மாதிரியாக நம்மால் கடக்க முடியாது. எதுவெல்லாம் நெருக்கடியிலிருந்து நம்மை வெளியேற உதவுகிறதோ அதுவே அதிகம் நினைவில் இருக்கும் ,அதுவே அதிகம் கொண்டாடப்படவும் செய்யும். இயற்கை ஒரு மாபெரும் ' Stress Buster ' ஆக இருக்கிறது. இயற்கையை நெருக்கமாக கவனிப்பதன் மூலமே இந்த வாழ்வு தரும் அழுத்தத்திலிருந்து வெளியேறலாம். நாம் செல்லும் பாதையின் ஊடாக கடந்து செல்லும் ஒரு பறவையின் நிழலுக்கு கூட நம் மனநிலையை மாற்றும் வல்லமை இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு செயல்பாடும் கவனிக்க வேண்டியதே. மழை ஒரு கொண்டாட்ட மனநிலையை எல்லோருக்கும் கொடுக்கிறது. மனதை சாந்தப்படுத்துகிறது. மழை பெய்யும் நேரத்தில் ஏதாவது செய்ய மிகவும் பிடிக்கிறது. மழைக்கு முந்தைய மனநிலையும் பிந்தைய மனநிலையும் வேறு வேறாகவே இருக்கின்றது. மழை மட்டுமல்ல , சூரியன் ,நிலவு , வானம் , மலை,மரம் ,செடி,கொடி,பூ ,காய் ,கனி , பறவைகள் ,விலங்குகள் என இயற்கையின் ஒவ்வொன்றுமே தனித்துவத்துடன் இயங்குகின்றன. இதை கவனிப்பதன் மூலமே நமக்கான சமாதானங்களைப் பெற முடியும்.


இயற்கைக்கு அடுத்ததாக கலை இருக்கிறது. பாடல்கள் கேட்டல் ,புத்தகம் வாசித்தல் ,எழுதுதல், திரைப்படங்கள், பயணங்கள் என ஏதோ ஒன்றை செய்வதன் மூலம் நமக்கான நெருக்கடிகளை விரட்ட முடியும். இதுவும் கடந்து போகும் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடியது தான். கடந்த போக எது துணை புரிகிறது என்று பார்க்க வேண்டும். இன்றைய சூழலில் இளையராஜாவும் ,வடிவேலுவும் இல்லையென்றால் நமக்கு பைத்தியமே பிடித்துவிடும். அந்த அளவிற்கு இந்த இருவரும் தமிழ் சமூகத்தை ஆக்கிரமித்துள்ளனர். தினசரி வாழ்க்கையின் ஊடாக நமக்கு பிடித்தமான ஒன்றைச் செய்யவும் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. பொழுதுபோக்கு என வகைப்படுத்தினாலும் அதைச் செய்யும் போது நமக்கு மகிழ்ச்சி உண்டாக வேண்டும். அதானால் தான் ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது முக்கியமானதாகிறது. 


மனம் விட்டு பேசுவதன் மூலமும் நெருக்கடியை கடக்கலாம். இன்றைய சூழலில் சரியான புரிதல் இல்லாதவர்களிடம் மனம் விட்டு பேசுவது மேலும் நெருக்கடியையே உருவாக்குகிறது. இன்னொரு மனிதரின் மனக்குறைகளை கேட்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். மிகவும் சிறிய காரணங்களுக்காக நிகழும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. அதுவும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாங்களும் சாவது என்பது அதிகரித்து வருகிறது. அவர்கள் வாழ்வதற்கான நம்பிக்கையை நாம் கொடுக்கவில்லை. சமூகம் என்ற அமைப்பில் நிகழும் தற்கொலைகளுக்கு நாமும் மறைமுக காரணம் தான்.எல்லா மனிதர்களும் வாழ்வதற்கான நம்பிக்கையை சமூகம் கொடுக்க வேண்டும். மனித மனம் விசித்திரமானது தான். எப்போது எப்படி நினைக்கும் என்று தெரியாது தான். தற்கொலைகள் எங்குமே தான் நிகழ்கின்றன. ஆனால் தற்கொலைக்கான காரணங்கள் ஆராயபட வேண்டியவை, விவாதிக்கப்பட வேண்டியவை. எந்தச் சூழலிலும் அந்த எண்ணம் வராத வாழ்க்கையை வழி நடத்துவது தான் முக்கியமானதாகிறது. மரணம் எல்லோருக்கும் பொதுவென்றாலும் அது தானாய் நிகழ வேண்டும். 


இயற்கையையும், கலையையும் கொண்டாடுவதன் மூலமே வாழ்க்கையையும் கொண்டாட முடியும் !


மேலும் படிக்க:

பாலியல் சுரண்டல்கள் ஒழியட்டும் !

மனிதம் பரவட்டும் !


Friday, September 12, 2025

Chat With Chen - அலெக்ஸ் - நேர்காணல் ❤️

 


Chat With Chen ரொம்பவே விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. பங்கு பெறும் ஒவ்வொருவரையும் அவர்களின் மனம் திறந்து பேச வைக்கிறார், ஷாஜி. மனம் சோர்வாக இருக்கும் போது Chat With Chen தொடரில் இருக்கும் ஏதேனும் ஓர் நேர்காணலைக் காண்பது வழக்கம். அதனாலேயே முழுவதும் பார்க்க வாய்ப்பிருந்தாலும் இன்னும் பலரின் நேர்காணல்கள் பார்க்கப்படாமலே இருக்கின்றன. இடையில் எப்பவாவது ஒரு புது நேர்காணலை காண்பது வழக்கம். அப்படி உடனே பார்த்தது தான் அலெக்ஸ் அவர்களின் நேர்காணல்.


நாம் எல்லோருக்குமே இசை பிடிக்கும். அது எந்த மாதிரியான இசை என்பது மட்டும் தான் வித்தியாசம். இசையை, இசைக்கலைஞர்களை அங்கத உணர்வோடு அலெக்ஸ் அணுகும் விதம் தான் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. இசையை அங்கத உணர்வோடு அணுகியவர்கள்  சமீபத்தில் நம் சூழலில் இல்லை. நம்மில் பெரும்பாலானோர்களுக்கு டைமிங் காமெடி ரொம்பவே பிடிக்கும். இசையுடன் டைமிங் காமெடியும் கலந்தால் இன்னும் சுவாரசியம் தானே. அந்த இடத்தில் தான் அலெக்ஸ் ஜெயிக்கிறார். 


நம்மில் பெரும்பாலானோர், நமக்கு பிடித்த வேலையைச் செய்வதில்லை அல்லது அப்படி பிடித்த வேலையைச் செய்ய முயற்சிப்பதும் இல்லை. பிழைப்பிற்காக கிடைத்த வேலையைச் செய்பவர்களே அதிகம். கிடைத்த வேலையைச் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு காலகட்டத்தில் நமக்கும் தோன்றியிருக்கும், " இந்த வேலையை விட்டுவிட்டு நமக்கு பிடித்த வேலையைச் செய்ய வேண்டும்" என்று. ஆனால் அதற்கு முக்கியத்துவம் தராமல் பிழைப்பிற்கான வேலையை தொடர்ந்து செய்பவர்களே அதிகம். பிடித்த வேலையை செய்வதற்காக கிடைத்த வேலையை விட்டவர் தான், அலெக்ஸ். இவரைப் போல உலகெங்கும் உதாரணங்கள் நிறைய உள்ளன. 


Prime Video -ல் வெளியான அவரது ' Alex in Wonderland ' அற்புதமான நிகழ்ச்சி. தமிழ் திரையிசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து பார்த்த நிகழ்ச்சி. இசை விமர்சகர் ஷாஜிக்கு பிறகு மலேசியா வாசுதேவன் அவர்களை பொதுவெளியில் முன்னிலைபடுத்திய நிகழ்ச்சியாக அது அமைந்தது. அதற்கு காரணம் நம்மை போல் அவரும் ஷாஜியின் ' மலேசியா வாசுதேவன் மகத்தான திரைப்பாடகன்' கட்டுரையை படித்ததின் பிறகான பாதிப்பில் தான் இதைச் செய்திருக்கிறார் என்பது இந்த நேர்காணல் மூலமாக தெரிய வருகிறது. அலெக்ஸ் பங்கு பெற்றதாக சொல்லும் ஷாஜி அவர்கள் ஒருங்கிணைத்த மலேசியா வாசுதேவன் நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு சென்னையில் இருந்த போது எனக்கும் அமைந்தது. அது ஒரு அற்புதமான நிகழ்வு. 


ஒவ்வொரு மனிதரின் வாழ்வும்,  கேட்கும் நமக்கு கதை தான். கதை கேட்பது என்பது நமக்கு சலிப்பதேயில்லை. அதனால் தான் இத்தகைய நேர்காணல்கள் நம்மை ஈர்க்கின்றன. அலெக்ஸ் பற்றி நமக்குத் தெரியாத நிறைய விசயங்களை இந்த நேர்காணல் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். அலெக்ஸ் இந்த இடத்தை அடைவதற்கு நிறைய உழைத்திருக்கிறார். நிறைய பயிற்சிகள் செய்திருக்கிறார். எத்தனையோ நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பில் உருவாகும் எத்தனையோ  திரைப்படங்கள் நமக்கு சலிப்பைத்  தருகின்றன. தனிமனிதனாக 2 , 3 மணி நேரம் நமக்கு சலிப்பில்லாமல் ஒரு  நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது ரொம்பவே பெரிய விசயம். 


Amazon நிறுவனத்தின் Prime Video இவரது புதிய மேடை நிகழ்ச்சியான '  Alexperience ' நிகழ்ச்சியை வாங்க மறுத்த சூழலில் மற்ற இடங்களிலும் முயற்சி செய்தும் பலனளிக்காததால் தானே ஒரு பதிய OTT தளத்தை உருவாக்கி அதில் இந்த Alexperience நிகழ்ச்சியை கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்டு இருக்கிறார். அந்த OTT ன் பெயர் ANBA TV. இதுவும் ரொம்பவே பெரிய விசயம். இதிலும் அலெக்ஸிற்கு வெற்றி கிடைக்கட்டும்.


மொத்தத்தில் நல்லதொரு நேர்காணல் ❤️

மேலும் படிக்க :

நான் உங்கள் வீட்டு பிள்ளை - பூவை செங்குட்டுவன் !

மனிதர்கள் - குற்றமுடைய நெஞ்சு குறுகுறுக்கும் !

Tuesday, September 2, 2025

நான் உங்கள் வீட்டு பிள்ளை - பூவை செங்குட்டுவன் !

 


'புதிய பூமி' திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் உங்கள் வீட்டு பிள்ளை..." என்ற பாடல் வாலி அல்லது கண்ணதாசன் எழுதியிருப்பார் என்று நினைத்தால் இப்பாடலை எழுதியிருப்பவர், பூவை செங்குட்டுவன் ❤️. அதிகளவில் பக்திப்பாடல்கள் எழுதியிருக்கிறார்.  அவற்றில் பெரும்பாலானவை பெருவெற்றி பெற்ற பாடல்களாக இருக்கின்றன. இப்பாடலும் பக்தி பாடல்தான், நாயக பக்திப்பாடல் .

" நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை

காலம்தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும்
செயலே எந்தன் சேவை

இதயம் என்பது ரோஜாவானால்
நினைவே நறுமணமாகும்
எங்கே இதயம் அங்கே வாழும்
அன்பே என்னை ஆளும்

கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே

பிறந்த நாடே சிறந்த கோவில்
பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
கோபுரமாகும் கொள்கை

உனக்கொரு பங்கும்
எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு

எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி "

பூவை செங்குட்டுவன் இயற்றிய மற்ற பாடல்கள்...

 
தாயிற் சிறந்த கோயிலுமில்லை (அகத்தியர்)


ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜ சோழன்)


இறைவன் படைத்த உலகை (வா ராஜா வா )


ராதையின் நெஞ்சமே (கனிமுத்துப்பாப்பா)

 
காலம் நமக்கு தோழன் (பெத்த மனம் பித்து)


காலம் எனக்கொரு (பௌர்ணமி),

 
வானம் நமது தந்தை (தாகம்)


திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (கந்தன் கருணை)


ஆடுகின்றானடி தில்லையிலே (கந்தன் கருணை)


திருப்புகழைப் பாட பாட (கௌரி கல்யாணம்)


வணங்கிடும் கைகளில் (கற்பூரம்)


வணக்கம் சிங்கார (காதல் வாகனம்)


திருநெல்வேலி சீமையிலே (திருநெல்வேலி)

//உனக்கொரு பங்கும்
எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு

எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி// ❤️

மேலும் படிக்க :

ஆலோலங் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே... !

காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️

Wednesday, July 30, 2025

மதிலுகள் ❤️

 


எந்த இலக்கிய படைப்பாக இருந்தாலும் அதைத் திரைப்படமாக எடுப்பது சவாலான விசயம். மம்முட்டியும் ,அடூர் கோபாலகிருஷ்ணனும் இணைந்து இந்தச் சவாலில் வென்றிருக்கிறார்கள், 1990ல். உண்மையிலேயே இந்தத் திரைப்படத்தைக் காண்பது அலாதியான அனுபவம். 'மதிலுகள்' என்ற இந்த வைக்கம் முகமது பஷீரின் குறுநாவலை நீங்கள் வாசித்து இருந்தாலும், வாசிக்கவில்லை என்றாலும் கூட இந்தத் திரைப்படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். 


படமாக்கப்பட்ட விதம் அற்புதம். இப்படி ஒரு சிறை இருந்தால் நாமும் சென்று அங்கு தங்கி விடலாம் என தோன்றும் அளவிற்கு காட்சிகளை படம்பிடித்து இருக்கிறார் இயக்குநர், அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்கள். பஷீரின் எழுத்துகள் பாசாங்கில்லாதவை. சக மனிதர்கள் மீதான அன்புதான் அவரது பேசுபொருள். அப்படிப்பட்ட எழுத்தை திரையில் கொண்டுவருவதற்கு நிறைய உழைக்க வேண்டியிருந்திருக்கும், உழைத்திருக்கிறார்கள். 


மம்முட்டி ஒரு தேர்ந்த நடிகர். எந்த மாதிரியான கதாப்பாத்திரத்திலும் தன்னை பொருத்திக் கொள்ளும் திறமையுடையவர். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களிலும் கூட நாம் இதைக் காண முடியும். பஷீர் எனும் ஆளுமையை திரையில் கொண்டு வர நிறைய மெனகெட்டிருக்கிறார். பஷீராக மட்டுமே திரையில் தெரிய உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. மம்முட்டி இப்போது இந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் கூட திரும்பவும் இப்படியான சூழலில் மீண்டும் நடிக்கவே விரும்புவார். இத்திரைப்படம் படமாக்கப்பட்ட இடம் அவ்வளவு அழகானது.


பஷீர்- நாராயணி பகுதி எல்லாம் கவிதை. நாராயணி குரல் ' எந்தோ.. ' என தொடங்குவது இப்போதுவரை காதில் கேட்கிறது. 2023ல் வெளிவந்த ' மகாராணி ' திரைப்படத்தில் கூட இப்படியான ஒரு பகுதி இருக்கும். ராணி கதாப்பாத்திரத்தின் குரலை மட்டுமே திரைப்படத்தின் இறுதிகாட்சி வரை நம்மால் கேட்க முடியும். இறுதியில் மட்டுமே ராணியின் முகம் தெரியும். ஆனால் நாராயணியின் முகம் இன்று வரை நமக்கு தெரியவே தெரியாது. அந்த ராணி கதாபாத்திரமும் உரையாடலை ' எந்தோ டா..' என்றே தொடங்கும். இந்தக் கதாப்பாத்திரத்திற்கு ' மதிலுகள்- நாராயணி ' ஒரு முன்மாதிரிமாக இருந்திருக்கக்கூடும். சக மனிதர் மீதான நேசத்திற்கு, அன்பிற்கு, காதலுக்கு மதில் கூட தடையாக இல்லை. 


எல்லோரையும் நல்லவர்களாக, எல்லாவற்றிலும் நல்லதை மட்டுமே காணக் கூடியவர்களாக, எதையும் எதிர்கொள்பவர்களாக இருக்கும் வைக்கம் முகமது பஷீர், பிரபஞ்சன் போன்றவர்களின் மனங்கள் நமக்கெல்லாம் வாய்க்க வேண்டும். 


ஒரு மென்மையான திரையனுபவத்திற்கு 'மதிலுகள்' திரைப்படத்தைக் காணலாம். YouTube -ல் காணக்கிடைக்கிறது.

மேலும் படிக்க :

மனிதர்கள் - குற்றமுடைய நெஞ்சு குறுகுறுக்கும் !

மனோரதங்கள் (MANORATHANGAL ) ❤️

Wednesday, July 23, 2025

மனிதர்கள் - குற்றமுடைய நெஞ்சு குறுகுறுக்கும் !


"மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" என்ற ஜி.நாகராஜனின் கூற்று எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. அப்படியான மனிதர்களின் சல்லித்தனத்தை இத்திரைப்படம் பேசுகிறது. மதுபோதையால் நிகழும் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஆளும் அரசுகள், குற்றங்கள் எதுவுமே நடக்காதது போலவே நடந்து கொள்கின்றன. மது விற்பதோ , மது குடிப்பதோ குற்றமில்லை. ஆனால் அது இன்னொரு தனி மனிதரை பாதிக்கும் போது குற்றமாகிறது. மது விற்பனையை தீவிரமாக கண்காணிப்பது போலவே அதனால் குற்றங்கள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதும் அரசின் கடமைதான். அப்படியான ஒரு அரசு இன்னும் தமிழ்நாட்டில் அமையவில்லை.


என்னதான் மனிதர்கள் குடும்பமாக, சமூகமாக இயங்கினாலும் சுயநலம் தான் மனிதர்களின் அடையாளம். எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் பிரச்சனை என்று வரும் போது பெரும்பாலும் சுயநலமாகவே சிந்திப்பார்கள்.

அப்படியான நண்பர்கள் மது போதையால் நடந்து கொள்ளும் விதமும் அதனால் உருவாகும் சிக்கல்களும், அவர்களின் சுயநலமான மனநிலையும், சல்லித்தனமும்தான் இந்த ' மனிதர்கள் ' திரைப்படம். 

  

தெரிந்தோ தெரியாமலோ குற்றம் நிகழ்த்தப்பட்ட பிறகு அதிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ளவே மனிதர்கள் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். குற்றம் நிகழ்த்தப்படுவதற்கு முன்பு அவர்களது வாழ்வு எப்படி இருந்ததோ அதே வாழ்வை குற்றம் நிகழ்ந்த பிறகும் அடைய விரும்புகிறார்கள். நண்பர்களுக்குள் நிகழும் குற்றமும் அதன் பிறகான அவர்களின் மனநிலையும் திரையில் காட்சிகளாக விரிகின்றன.


Crowd Funding மூலம் இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முதலில் துணிச்சல் வேண்டும். நல்ல முயற்சி. நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தங்களது பணியைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. இரவு நேர கிராமச் சாலைகளையும் விதவிதமான கோணங்களால் அழகாக காண்பித்து இருக்கிறார் , ஒளிப்பதிவாளர். கார் சக்கரங்களை படம் பிடித்த விதமும் அழகு.  இரவில் படம் பிடித்திருந்தாலும் மற்ற காட்சிகளை விட  தொடக்க காட்சியும் இறுதி காட்சியும் ரொம்பவே இருட்டாக இருந்தன. இதைக் கொஞ்சம் கவனத்தில் கொண்டிருக்கலாம். ஒரு வேளை , தொடக்கத்திலும் இறுதியிலும் மனிதர்களின் இன்னும் இருட்டான பக்கங்களைச் சொல்வதால் கூடுதல் இருட்டாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ.


பேச்சு வழக்கும் கதை நிகழும் களமான திண்டுக்கல் பகுதியைச் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. அதே போல இது தானாக நிகழ்ந்த குற்றமா அல்லது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட குற்றமா? என்ற சந்தேகத்தையும் கடைசி வரை கொண்டு சென்றிருக்கிறார், இயக்குநர், ராம் இந்திரா.


'குற்றத்தை மறைத்தல்' என்ற வகைமையில் இதற்கு முன்பும் நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை நகைச்சுவையை முன்வைத்த திரைப்படங்களாகவே இருக்கின்றன. இதே பின்னணியில் ஒரு சீரியஸ் திரைப்படமாக, மனிதர்களின் அக உணர்வுகளை, மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு திரைப்படமாக நாம் ' மனிதர்கள்  ' திரைப்படத்தை அணுகலாம். இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


Aha மற்றும் SunNext OTT தளத்தில் காணக்கிடைக்கிறது.

மேலும் படிக்க:

ஜமா - கலையின் கலை !

AMAR SINGH CHAMKILA !

Thursday, July 10, 2025

அக்கமகாதேவி !


விகடன் தடம் -ல் வெளியாகியிருக்கும் அக்கமகாதேவியைப் பற்றிய பெருந்தேவியின் கட்டுரை கவனிக்க வேண்டிய ஒன்றாகும். பெண்களை அடிமையாகவே நடத்தும் இந்து சமய மரபில் இப்படி ஒரு பெண் வெளிப்பட பசவண்ணரின் இயக்கம் தான் முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. உண்மைக்கு நெருக்கமில்லாத எதுவும் வீண் தான்.வசனங்களால் வளர்க்கப்பட்ட பசவண்ணரின் இயக்கம் உண்மைக்கு நெருக்கமானதாக நடைமுறைக்கு பொருத்தமில்லாததை புறந்தள்ளும் இயக்கமாக இருந்திருக்கிறது. தூமைத் தீட்டு , சாவுத் தீட்டு , குழந்தைப் பேறுத் தீட்டு , சாதித் தீட்டு, வைதவ்யம் எனப்படும் கைம்பெண் கோலம் போன்ற ஐந்து தீட்டுகள் பசவண்ணரின் இயக்கத்தினரால் (சரணர்கள் ) புறந்தள்ளப்பட்ட தீட்டுகள் ஆகும். இந்த இயக்கம் 12ம் நூற்றாண்டில் உருவானதாகச் சொல்லப்படுகிறது. 12ம் நூற்றாண்டிலேயே இந்த அளவிற்கு தெளிவு இருந்திருக்கிறது. இந்த தீட்டுகள் இன்றும் தொடர்வது வெட்கக்கேடு. இன்றைக்கும் இந்த ஐந்து தீட்டுகளும் இந்து சமயத்தில் தீவிரமாக பின்பற்றப்படும் தீட்டுகளாகவே உள்ளன. இந்த ஐந்து தீட்டுகளை ஒதுக்கிவிட்டாலே நிறைய மாற்றங்கள் நிகழும்.


முள்ளை முள்ளால் எடுப்பது போல ஆன்மீகத்தை , ஆன்மீகத்தால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை பசவண்ணரின் இயக்கம் நமக்கு கொடுக்கிறது. ஒவ்வொரு மதத்திலும் பின்பற்றப்படும் நடைமுறைக்கு ஒவ்வாத அயோக்கியத்தனங்களை வேரறுக்க இன்னொரு ஆன்மீக இயக்கம் தோன்ற வேண்டும். பகுத்தறிவுவாதிகளும் ஆசிரமங்கள் தொடங்க வேண்டும். 


அக்கமகாதேவியை பெருந்தேவி அணுகியிருக்கும் விதம் தனித்துவமானது. ஆண்டாளைப் போல அக்கமகாதேவியும் சென்னமல்லிகார்ச்சுனன் மீது மையல் கொண்டிருந்தார் என்றாலும் அவரது வாழ்க்கை பெரும் கலாச்சார உடைப்பு. அவரை ஒரு பெண்ணியவாதியாகவே பெருந்தேவி அணுகுகிறார். ஆடை களைதல் என்ற ஒன்றின் மூலமே நிறைய உடைப்புகளைச் செய்திருக்கிறார். இவ்வளவு வலிமை வாய்ந்த, எந்தவித நிர்பந்தத்திற்கும் கட்டுப்படாத, பாலினம் கடந்த சுதந்திரமான பெண் இன்றும் சாத்தியமா ? என்று தெரியவில்லை என்கிறார், பெருந்தேவி. இன்றும் பெண்களுக்கான பொதுவெளி என்பது ஆண்களுக்கான பொதுவெளி போல இல்லை. பெரும்பான்மையோருக்கு பொதுவெளியே இல்லை என்பது தான் உண்மை.


இந்த மாதிரியான வரலாற்று நிகழ்வுகள் கவனம் பெரும் போது நிகழ்கால வாழ்வில் நிறைய திறப்புகள் நிகழ சாத்தியமிருக்கிறது. 

(10-07-2018 அன்று முகநூலில் எழுதிய பதிவு )

மேலும் படிக்க :

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன்!

Tuesday, July 1, 2025

மனோரதங்கள் (Manorathangal ) ❤️


மனதிற்கு நெருக்கமான ஆர்ப்பாட்டமில்லாத தொடர். எழுத்தை திரையில் கொண்டு வருவதென்பது  எப்போதுமே சவாலானது. முதலில் இப்படி ஒரு முயற்சி எடுத்ததே பெரிய விசயம். M.T. வாசுதேவன் அவர்களின் மகளான அஸ்வதி M.T.வாசுதேவனின் 9 கதைகளை தேர்ந்த்தெடுத்து அதில் ஒரு கதையை இயக்கியும் இந்த ஒரு நல்ல தொடரை கொடுத்திருக்கிறார். முதலில் 20 கதைகள் படமாக்குவதாக இருந்து பிறகு 10 ஆக குறைந்து அப்புறம் 9பதில் முடிந்திருக்கிறது. 


M.T.வாசுதேவன் அவர்களின் எழுத்துகளை இதுவரை வாசித்ததில்லை. அவரின் கதைகள் இந்த ' மனோரதங்கள்' மூலமே அறிமுகம். இந்தத் தொடரில் இடம்பெற்ற அவரின் கதைகளை வாசிக்காததால் தானோ என்னவோ இந்தத் தொடரில் எந்தக் குறைகளும் தெரியவில்லை. இதே கதைகளை முன்பே வாசித்தவர்களுக்கு போதாமைகளும், ஏமாற்றங்களும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இம்மாதிரியான முயற்சிகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.


ஏறக்குறைய மலையாள திரையுலகே நடித்தது போல அத்தனை முக்கிய நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். தலைப்பிற்கு ஏற்றார் போல மனித மனங்களே ஒவ்வொரு கதையையும் நகர்த்திச் செல்கின்றன. வெவ்வேறு இசையமைப்பாளர்கள் பங்கெடுத்திருந்தாலும் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இசையை வெகுவாக ரசிக்க முடிந்தது. இந்தத் தொடர் மனதிற்கு நெருக்கமாக அமைந்ததற்கு பின்னணி இசையும் ஒரு காரணம். ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. சிறிய பகுதியோ பெரிய பகுதியோ கதை நடக்கும் கால கட்டத்தை அப்படியே திரையில் கொண்டுவர நிறைய உழைத்திருப்பது நன்றாகவே தெரிந்தது. கலை குழுவினருக்கு வாழ்த்துகள். 


மொத்தத்தில் அமைதியாக ஒரு தொடரை காண விரும்புபவர்கள் இத்தொடரைக் காணலாம். தமிழில் இருந்தாலும் மலையாளத்தில் நீங்கள் பார்த்தால்தான் இன்னும் நெருக்கமாக உணர முடியும்.


இயற்கைக்கு அடுத்து கலை மட்டுமே நமக்கு எல்லாமுமாக இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் நம் மனதை அமைதிப்படுத்துவது ஏதோ ஒரு வடிவத்தில் உள்ள கலை தான். அது எழுத்தாக இருக்கலாம் , இசையாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம், சினிமாவாக இருக்கலாம் 'மனோரதங்கள்' - ஆகவும் இருக்கலாம்.


அஸ்வதி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


Z5 - OTT தளத்தில் காணக் கிடைக்கிறது !


மேலும் படிக்க :

ONE HUNDRED YEARS OF SOLITUDE - FANTASTIC EXPERIENCE ❤️

EXTRAORDINARY ATTORNEY WOO - FEEL GOOD SERIES !

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms